A few words about item

தீண்டி விலகிய கணம் - மனுஷ்ய புத்திரன்

2019-இல் தான் எழுதிய 1000 கவிதைகளை 11 தொகுதிகளாக 1650 பக்கங்களில் ஜனவரி 5 ஆம் தேதி  சென்னை புத்தக கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டார் மனுஷ்ய புத்திரன் அவர்கள்.

மனுஷ்ய புத்திரனின் அந்த 11 கவிதைத் தொகுப்புகள்,

1. ஒரு நாளில் உனது பருவங்கள் - (இருத்தலின் புத்தகம்)
2. தீண்டி விலகிய கணம் - (அன்பின் புத்தகம்)
3. மர்ம முத்தம் - (விசித்திர காலத்தின் புத்தகம்)
4. இரவுக்கு கைகள் இல்லை - (கையறு நிலையின் புத்தகம்)
5. சிநேகிதியின் காதலர்கள் - (நம் காதல்களின் புத்தகம்)
6. வைரல் யானை - (அபத்த காலத்தின் புத்தகம்)
7. தரைக்கு வராத இலை - (தனிமையின் புத்தகம்)
8. மெளனப் பனி - (மரணத்தின் புத்தகம்)
9. யெளவனத்தில் அமரும் கிளி - (காட்சிப் பிழையின் புத்தகம்)
10. தேசவிரோத மலர் - (எதிர்ப்பின் புத்தகம்)
11. வாதையின் கதை - (சிகிச்சையின் புத்தகம்)

நான் வாங்கிய இந்த கவிதைத் தொகுப்புகளில் "தீண்டி விலகிய கணம் - அன்பின் புத்தக"மும் ஒன்று. எப்போதும் முகநூலில் தொடர்ச்சியாக கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரன் அவர்கள் இந்த தீண்டி விலகிய கணம் கவிதைப் புத்தகத்தில் தன் அன்பினை வெளிப்படுத்துகிறார். மொத்தம் 82 கவிதைகளைக் கொண்ட இந்நூலில் ஒவ்வொரு கவிதைகளும் எந்தெந்த நேரத்தில் எந்த தேதியில் எழுதப்பட்டது என்ற விவரத்தையும் கொண்டுள்ளது.

தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும் ஒன்றை ஒன்று, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது. ஆனால் இக்காலக்கட்டத்தில் எல்லோரும் தனித்தனியாகவே இருக்க விரும்புகிறார்கள்.  மனுஷ்ய புத்திரன் அவர்களின் அன்பு என்பது பிரிந்து சென்று விட்டால் கனத்து விடுகிறது.

அன்பின் பாரங்கள்

என் தோளை அழுத்திய சில அன்பின் பாரங்களை
இப்போது இறக்கி வைத்துவிட்டேன்

பிறகு நான் கைவீசி
இலகுவாக நடக்கவேண்டும்தானே

இல்லாமலாகிவிட்ட அன்பின் பாரங்கள்
முன்பைவிட இப்போது
நூறுமடங்கு கனத்துவிட்டன

திரைப்படங்களில் கதாநாயகியின் முந்தானை கதாநாயகன் முகத்தில் பட்டுவிட்டால் அவனுக்கு காதல் பூ பூக்கின்றன. ஆனால் கவிஞர் உள்ளத்தில் அன்பு தழும்பி விடுகிறது.

தீண்டி விலகிய கணம்

யார் முந்தானையோ
யார் துப்பட்டாவோ
யார் முகத்திலோ
யார் கரத்திலோ
எதேச்சையாக ஒரு கணம் பட்டு விலகுகிறது

அவ்வளவு தனிமையான உலகில்
அந்த ஒரு கணம் மட்டுமே
அன்பினால் தழும்பிவிடுகிறது.

நம்மிடம் ஒருவர் காட்டும் அன்பை, பரிசுகளை மற்றும் இனிப்புகளை நாம் அவரிடத்திலேயே பிறிதொரு நாள் கொண்டு செல்கிறோம். ஆனால் நாம் கவிஞரிடம் காட்டும் அன்பு சிறப்பானதாக மாற்றுகிறது.

கை மாறும் அன்பு

..............................
..............................
மேலும்
நீங்கள் என்னிடம் காட்டும் அன்பும்
மிகச் சிறந்ததாகவே இருக்கட்டும்
ஏனெனில் அந்த அன்பைத்தான்
பதிலுக்கு உங்களுக்கு அல்ல
நான் இன்னொருவருக்குக் காட்ட வேண்டும்.

அன்பின் பொருட்டு கவிஞர் யாரையும் பரிதவிக்கவோ, மனமுடையவோ செய்வதில்லை. ஆனால் அவர் மனம் உடைந்து போகிறார்.

இஷ்டப்படி

என் இஷ்டப்படி இருக்க வேண்டுமென
ஒருபோதும் உன்னை நான் கேட்டதில்லை

எப்போதாவது நான் உன்னை இஷ்டப்படுகையில்
நீ மறுதலித்தால்
மனம் உடைந்து போவேன்

அன்பு என்பது மனிதர்களுக்கு மனிதர்கள் செலுத்துவது மட்டும் அல்ல; மனிதர்கள் பிற  உயிரினங்களிடத்தும் செலுத்துவதே உண்மையான அன்பு. ஆனால் சில மனிதர்கள் மனிதர்களிடத்தே அன்பு செலுத்துவது இல்லை எனும்போது மற்ற உயிரினங்களிடத்தில் மட்டும் எவ்வாறு அன்பு செலுத்துவர். அப்படி ஒருத்தி இருக்கையில் கவிஞர் பறவைகளுக்காக தன் சிறு உள்ளங்கையை திறந்து வைக்கிறார்.

உள்ளங்கையில் வளரும் வனம்

..............................
..............................
ஆகாயத்திலிருந்து
கூடு திரும்பும் பறவையே
சற்று மெதுவாக வா
என் உள்ளங்கையில்
உனக்கொரு சின்னஞ்சிறு காட்டை
வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் நாம் திரும்பப் பெற முடியாதது குழந்தைப் பருவம் மட்டுமே. ஏனெனில் குழந்தைப்பருவம் என்பது விளையாட்டு மட்டுமல்ல; ஒரு சிறு பொருள் கிடைத்தாலும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சி என்பது அளவிட முடியாது. குழந்தைகள் ஏன் குழந்தைகளாக இருக்க வேண்டும். அதற்கு விடை தருகிறார் கவிஞர்.

குழந்தைகளாக இருப்பது

குழந்தைகள்
ஏன் குழந்தைகளாக இருக்கிறார்கள்?
சந்தோசமாக இருப்பதற்கு மட்டும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் பரம்பரையில் வந்த நம் தமிழ் பாட்டிகளும் தான் கேட்ட, பார்த்த மனிதர்களுக்கும் ஏதேனும் சுகமில்லை என்றால் நலம் விசாரித்து அவர்கள் பரிபூரண குணமடைய பிரார்த்திப்பார்கள். அது நம் பாட்டிகளின் அன்பின் வெளிப்பாடு. கவிஞரின் பாட்டியும் பிரார்த்திக்கிறாள். ஆனால் எல்லோரும் அவளை பைத்தியம் என்றே சொல்கிறோம்.

பைத்திய அன்பு

..............................
..............................
சைரன் ஒலி கேட்கும்
ஒவ்வொருமுறையும்
எழுந்து உட்கார்ந்துகொள்ளும் மூதாட்டி
நெஞ்சில் கைவைத்து
பிரார்த்திக்க துவங்கி விடுகிறாள்

வீட்டில் அவளை
பைத்தியம் என்கிறார்கள்
அன்பு எப்போது
பைத்தியமாக இல்லாமலிருந்தது.

2019-ஆம் ஆண்டு சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சமயத்தில் இந்துத்துவாதிகள் சமூக வலைதளங்களில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அக்குழந்தைக்கு பச்சதாபம் காட்டத் தேவையில்லை என சமூக வலைதளங்களில் எழுதினர்.அதற்கு கவிஞரின் பதில் இதோ,

கர்த்தரே காத்தருளும்

பாவாடைகளின் குழந்தைகள்
சவக்குழிக்குச் செல்லட்டும்
என்பவனின் குழந்தைகளை
கர்த்தரே நீர் காத்தருளும்
அவர்களின் பூம்பாதங்கள்
சிறுபள்ளங்களில் இடறிவிடாமல்
உம் கைகளால் தாங்கிக்கொள்ளும்.

இந்த உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது. மனுஷ்ய புத்திரன் என்ற கவிஞரின் உலகம் கவிதைகளால் சூழப்பட்டுள்ளது. தமிழ் கவிதைச் சூழலில் ஏராளமான கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு மிகப்பெரிய இடம் உண்டு.

Total Number of visitors: 4

No of users in online: 4